Rihla

Rihla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rihla, Historical Tour Agency, Chennai.

மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்திருநெல்வேலி மாவட்டத்தை மூன்றாக வகிர்ந்த பிறகும் இன்னும் திருநெல்வேலி மாவட்டக்காரராகவே ...
13/12/2024

மழை ரிஹ்லா –வேணுவனத்தில் ஒரு பகல்

திருநெல்வேலி மாவட்டத்தை மூன்றாக வகிர்ந்த பிறகும் இன்னும் திருநெல்வேலி மாவட்டக்காரராகவே நீடிப்பவர் ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸ்.
வருவாய் நிர்வாக அடிப்படையில் நான் தூத்துக்குடி மாவட்டத்துக்காரன் என்றாலும் பிறந்ததோ பிரிக்கப்படாத அகன்ற தாம்பாள திருநெல்வேலிச் சீமையில்தான். நிர்வாகப்பிரிவினைக்கு அப்பால் உணர்வாலும் நிலத்தாலும் தூத்துக்குடி,தென்காசி மாவட்டத்துக்காரர்கள் நெல்லையான்கள்தான்.
காயல்பட்டினம்/ஏர்வாடி வாசிகளுக்குமருத்துவ தேவைகளுக்கான அல்லது நெடும் பயணங்களுக்கான இடைவழி நகரமாகவே இருந்து வந்த திருநெல்வேலி நகரத்தை குறுக்கும் நெடுக்குமாக காலாற வேண்டும் என்ற அவா திடுமென தோன்ற எப்போதும் பயணத்திற்கு பின் நிற்காத ஏர்வாடி காஜா காதர்மீறான் பந்தே நவாஸை தொடர்பு கொண்டேன். இரண்டு நாட்களுக்கு முன்னதாக தகவல் சொல்லுங்கள் காக்கா என்றார். இப்படியான திடீர் பயணங்கள் செய்யும் திட்டம் ரிஹ்லாவின் கையிலிருப்பதால் இங்கிருந்து தொடங்குவோம் என பேசிக் கொண்டோம்.

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி வளாக நாட்டார் வழக்காற்றியல் துறைக்கு போவது உட்பட நான்கைந்து சந்திப்புகள் கைவசமிருந்தது.
ஒற்றை நாள் ரிஹ்லா என பெயர் வைக்கலாமா? என ஏர்வாடியாரிடம் கேட்ட போது 12/12/2024 வியாழனன்று கனமழை எச்சரிக்கை விடப்பட்டிருப்பதால் மழை ரிஹ்லா என்றழைப்போம் என அவர் பகர அவ்வாறே முடிவெடுக்கப்பட்டது.

வியாழன் காலை வீட்டிலிருந்து கிளம்பும்போதே மழை முன்னுரை கூறத் தொடங்கியிருந்தது. கடையில் காலை பசியாறை வாங்கிக் கொண்டிருக்கும்போது இரண்டாம் கியருக்கு(கியரை பல்லிணை எனப் தமிழாக்கி அடிவாங்க அணியமாக இல்லை) மாறியிருந்தது. தயக்கம் உள்ளில் கீற்றடித்தது. முன் வைத்த தலையை பின் வைப்பதில்லை. மழைக்கு ஏன்அஞ்ச? அதுவும் நம்மை மாதிரி இன்னொரு படைப்பு. அதன் கடிவாளத்தைப் பிடிக்குமாறு அதையும் என்னையும் படைத்தவனிடமே கேட்போம் எனத் தோன்றியது.

ஈற்றில் அங்ஙனமே நடந்தேறியது.
திருநெல்வேலி சந்திப்பிற்கு செல்லும் காலை ஏழரை மணி பனங்காட்டு எக்ஸ்பிரஸ்ஸிலும் இதுதான் நிலை.உள்ளும் வெளியிலுமாக மழை. ஏர்வாடியார் எந்ந நிலையில் இருக்கிறார் என்றறிய விளித்தபோது தலைவர் பாதி தொலைவு வந்து விட்டார். நிலையத்தின் தகரத்தலையில் மழையின் பெருந்தாளம். வீறாப்புக்கு புறப்பட்டு வந்து விட்டாலும் எப்படி வெளியே போவது என்ற சிறிய கேள்வி. குடையும் மழையங்கியும் கையிலில்லை.

இது எப்படியிருந்தாலும் நம்ம ஊரு இது. புரிந்து கொண்ட கூட்டாளனாய் மழை சற்று நகர்ந்து இடந்தரும். அப்படியே போக முடியலேன்னா காரமும் மதுரமும் காஃபியுமாக அடித்து விட்டு அடுத்த வண்டியில் ஊருக்கு திரும்பலாம் என்ற நினைப்பும் நிதானத்தைத் தந்தது.

ஒன்பதரை மணியளவில் ஏர்வாடியார் நிலையம் வந்து விட்டார். மழையங்கி இருந்தால் போகலாம் என கடையில் போய் விலை கேட்டால் கழுமரமாகி ஆயிரத்தை தொட்டு நிற்கிறது.. என்னருமை மழையை ஆயிரங்கொடுத்தா தொலைவில் நிறுத்துவது?
தாமிரபரணியில் குளிப்பதற்கென எடுத்து வந்திருந்த துவாலையை தலையில் சுற்றிக் கொண்டு பைக்கில் புறப்பட்டோம். ஏர்வாடியார் மழைக்கான மேலங்கி மட்டும் அணிந்திருந்தார்.

எங்கள் உலா பட்டியலின்படி கட்டுமானத்துறை தொழிலதிபரும் பிரமிள் நூலகத்தின் நிறுவனருமான மயன் ரமேஷ் அவர்களை சந்திக்கச் சென்றோம். பெரு நிறுவனமொன்றை கட்டி எழுப்பி வெற்றிகரமாக இயங்கி வரும் தன்னைப்போன்ற மனிதர்களில் மயன் ரமேஷ் தனித்துவமிக்கவர். இலக்கியத்தின் ஆழ்ந்த ஈடுபாடும் தொடர் வாசிப்பும் சமூக நல்லிணக்க கண்ணோட்டமும் ஒருங்கே அமையப்பெற்ற மனிதர். நீண்ட கால நண்பர் ஆர்.ஆர்.சீனிவாசன் வழியாக இவர் எனக்கு அறிமுகமானார்.
மயன் ரமேஷை சந்தித்து விட்டு வெளியேறும்போது ஏர்வாடியாரின் குடும்ப மருத்துவரான அக்யூஹீலர் ஒருவரின் மருத்துவகம் தென்பட்டது.மருத்துவர் கெட்டிக்காரர் என்றும் தான் இவரிடம் எதிர்பார்க்காவிதத்தில் நல்ல குணமடைந்திருப்பதாகவும் ஏர்வாடியார் நம்பிக்கையூட்டினார் . என் நண்பர்கள் அக்யூஹீலர்களாக உள்லனர். அவர்கள் மூலம் நடந்த பல வெற்றிக்கதைகளை கேட்டுள்ளேன். எனவே துணிவை உண்டாக்கிக் கொண்டு எனது நீண்ட நாள் சிக்கலொன்றிற்காக அவரிடம் காட்டியுள்ளேன். தினசரி மருந்துகளை விடச்சொல்லியிருக்கிறார்.சில வாழ்வியல் மாற்றங்களையும் பரிந்துரைத்திருக்கிறார். பார்ப்போம். வல்லோனை துணையாக்கி முயல்கிறேன். பயணங்கள் இது போல புதிய வாயில்களை எதிர்பாராவிதமாக திறந்திடும்.

பட்டியலில் உள்ள தலையாய இடங்களில் ஒன்றான பிரமிள் நூலகத்திற்கு செல்லலாம் எனப் பார்த்தால் அது சற்றுத் தொலைவிருக்கிறது. அத்தொலைவிற்கு மழை தடையாக வந்து நின்றது. எனவே அடுத்த இலக்குகளை நோக்கி நகரத் தீர்மானித்தோம்.

தமிழகத்தில் அறியப்பட்ட கவிஞர்களில் ஒரு சிலரைத்தவிர்த்து பெரும்பாலானவர்கள் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவர்கள். சிவராமலிங்கம்,தருமு சிவராம் என்றபிரமிள், இலங்கையின் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக அரசியல் போக்குகளில் அவருடைய கருத்துக்களை துணிவாக கவிதைக்கு வெளியே பேசியவர். கவிதையை கலையை மொத்த மானுடத்திற்குமானது என ஆழ்ந்து நம்பியவர்.

குலவணிகர்புரத்திலுள்ள காதர் அவுலியா ஜுமுஆ பள்ளிவாயிலில் தொழுதோம்.அப்பள்ளி வளாகத்தில்தான் சதக்கத்துல்லாஹ் அப்பா என்ற சதக்கத்துல்லாஹில் காஹிரி வலியுல்லாஹ்வின் மகனார் அடங்கப்பெற்றுள்ளார்கள்.
உணவருந்தி விட்டு பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரி வளாகத்திற்கு சென்றோம்.. தொடர் அலுவல்களுக்கு நடுவிலும் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையத்தில் பேராசிரியர் கார்மேகம் எங்களுக்காகக் காத்திருந்தார். மையம் உண்மையிலேயே நாட்டாராகத்தான் இருந்தது. கல்லூரி துறையொன்றிற்குள் நுழைந்த மாதிரி இல்லாமல் சிறிய கலைக்கூடத்திற்குள் நுழைந்த உணர்வு. மூங்கில்,உலோகம்,மண் போன்றவற்றினால் செய்யப்பட்ட பதுமைகளுடன் கோட்டோவியங்களும் பொருட்களும் இடம் பெற்றிருந்தன.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் வரலாற்றுத்துறைப் பேராசிரியரும் வாசிப்பும் தேடலும் கொண்ட நண்பர் சாகுல் ஹமீது மூலமாக பேராசிரியர் கார்மேகம் அறிமுகம். இனிய மனிதர். நல்லவர்கள் மேலும் நலவுகளையே கொண்டு வந்து இணைப்பார்கள்.

சில மணித்துளிகள் மட்டுமே உரையாடக் கிடைத்தது.அங்குள்ள விற்பனையகத்தில் பண்பாட்டு வேர்களைத் தேடி,ஈர்ப்பு விசை—பயன்பாட்டு நாட்டுப்புறவியல் ஆய்வுகள்,வழக்காறுகள் காட்டும் வாழ்வியல் முதலிய நூல்களை வாங்கிக் கொண்டோம். திருநெல்வேலிச் சீமையின் நாட்டாரியல் வழக்காற்றுத்தொகுப்பிற்காகவும் அங்கு சென்றோம். ஆனால் இதுவரை அப்படி தொகுக்கப்படவில்லை என சொன்னார்கள்.

பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரியின் நாட்டாரியல் வழக்காற்றியல் துறை புகழும் தனித்துவமும் பெற்ற துறை. இத்துறையிலிருந்து நெல்லைச்சீமையின் வழக்காறுகள்,தொன்மங்கள்,வாய்மொழி மரபுகள் தொகுக்கப்பட்டால் தேடுபவர்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

அடுத்ததாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தின் அருகிலுள்ள செயின்ட் மார்க் சாலையில் அமைந்திருக்கும் திருநெல்வேலி மாவட்ட அருங்காட்சியகத்திற்கு சென்றோம். ஆதிச்சநல்லூரின் விடயங்கள் கொஞ்சமிருந்தன. பாண்டியர்களின் வணிகத்தலைநகரமானகொற்கையில் கிடைத்தவைகள் எதுவுமில்லை. கட்டபொம்மனின் சகோதரர் ஊமைத்துரையை சிறைப்பிடித்து ஆங்கிலேயர் அடைத்து வைத்திருந்த இடம் என ஓர் அறை உள்ளது.காணொளிக்காட்சி காண்பிக்கப்படும் என்ற அறிவிப்புப் பலகை வேறு. உள்ளே விளக்கவோ வழிகாட்டவோ ஒருவருமில்லை. காணிப்பழங்குடிகளின் பண்பாட்டு மாதிரிகள் மனங்கவருகின்றன.நுழைவுச்சீட்டு வழங்குமிடத்தில் மட்டும் மூவர் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தனர். இந்த அருங்காட்சியகம் தெருவில் வெளிப்பார்வைக்கு உள்ளொடுங்கி கிடக்கிறது.ஆர்வலர்கள் மட்டுமே தேடி வரவியலும்.

எட்டாம் நூற்றாண்டு பாண்டியரின் அற்புத கருங்கல் கோட்டையின் கிழக்கு வாயிலைத்தான் மாவட்ட அருங்காட்சியகமாக்கியுள்ளனர். கூரைகளில் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது.திறந்த வெளி அரங்கொன்று அருங்காட்சியக வளாகத்திலேயே இருக்கிறது. அதற்கான பயன்பாட்டுக்கட்டணம் என தனியாகக் கிடையாது. அலுவலக நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளலாம் என அங்குள்ளவர்கள் தெரிவித்தனர்.

சிற்பத்தோட்டத்தை உள்ளடக்கிய செப்பு போன்ற இடம் செம்மையை பூசிக்கொண்டு நிற்கிறது.மாவட்டத்தின் சிறப்புக்கேற்ப அருங்காட்சியகமில்லை. ஒருவேளை புதியதாக உருவாக்கப்படும் பொருநை அருங்காட்சியகத்தில் நாம் எதிர்பார்க்கக்கூடியவை இடம் பெறலாம் என நம்புவோமாக.
மாவட்ட தொல்லியல் துறை அலுவலகம் பாளையங்கோட்டையிலேயே இருக்கிறது.அதைக்காண இன்னொரு நேரமெடுத்து வர வேண்டும் இன்ஷா அல்லாஹ்.

பயண காலத்தை இரண்டு மணி நேரத்திற்கு முன்னரே முடித்துக்கொள்வோம் என தீர்மானித்து இறுதிச் சுற்றாக திருநெல்வேலி நகரத்தின் முன்னொட்டான ஹலுவாவைத் தேடி சென்றோம். இருட்டுக்கடை அலுவா. அலுஆ என்ற அறபிச்சொல்லின் மரூஉதான் அல்வா,அல்வாவாகியிருக்கிறது.
திருநெல்வேலி சந்திப்பிலும்,நகரத்திலும் அலுவா விற்காதவன் பாவி என்னும் அளவிற்கு ‘சாந்தி,நியூ சாந்தி,நெல்லை சாந்தி’ஹலுவாக்கடைகள்.முதல் ‘சாந்தி’ இன்னும் வரைக்கும் சாந்தியடைந்திருக்க மாட்டாள் போலிருக்கிறது.ஆனால் சந்திப்பில் முதல் சாந்திக்கடையை வாடிக்கையாளர்கள் சரியாக தேடிப்போய் பிடித்த இனிப்பு,கார வகைகளையும் வாங்கிக் கொள்கிறார்கள்.

திருநெல்வேலி நகரத்திலுள்ள ‘இருட்டுக்கடை அலுவா’தான் திருநெல்வேலி அலுவாவிற்கு தொடக்கமாம்.1930களில் இராஜஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் இதைத் தொடங்கியிருக்கின்றனர்.
உண்மையான இருட்டுக்கடை ஹலுவாவின் சுவைக்கு இரண்டு காரணங்களைச் சொல்கிறார்கள். முதலாவது அலுவாவிற்கான மூலப்பொருளான கோதுமை மாவை இவர்கள் கையால்தான் திரிப்பதோடு அலுவாவையும் கையால்தான் சமைக்கிறார்கள்.பொறிகளை பயன்படுத்துவதில்லை. இரண்டாவது காரணம், இதன் உருவாக்கத்துக்கு தாமிரபரணி நீரை பயன்படுத்துவது..
மேற்சொன்ன இரு காரணங்களுமே உண்மையாகவிருக்க வாய்ப்புகள் கூடுதல். திருநெல்வேலி அலுவாவின் சுவையில் தமிழகத்தின் வேறெந்த மாவட்டத்திலும் நான் சாப்பிடக் கிடைத்ததில்லை. நாங்கள் போன சமயம் பிற்பகல் மூன்றரையளவில் இருக்கும். எங்களுக்கு உண்மையான இருட்டுக்கடை அல்வாவை உள்ளூர்க்காரரொருவர் உடன் வந்து அடையாளங்காட்டினார். கிருஷ்ணாசிங் சுவீட் ஸ்டால்(இருட்டுக்கடை) மூடியிருந்தது.அதிலுள்ள அறிவிப்பு பலகையில் “கடை மாலை ஐந்தரை மணிக்கு திறக்கப்படும்.அதுவரை அருகிலுள்ள எங்கள் சார்பு நிறுவனமான விசாகம் சுவீட்சில் எங்கள் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்’ என்றிருந்தது.

கொஞ்சம் அலுவாவும் மிளகு காராபூந்தி,மிளகு காரச்சேவும் வாங்கிக் கொண்டோம். இவற்றில் கரித்து திகட்டும் \ இனிப்பும், நெய் சேர்க்கையும்(எண்ணெய்) இல்லை.கணக்காக மென்மையாக வாசனையுடன் தரமாக உள்ளன.நல்ல நினைவை உண்டாக்கும். திருநெல்வேலியின் தனித்துவங்களின் ஒன்றினை பெற்ற நிறைவில் ஊருக்குக் கிளம்பினோம்.
எழுத்தை நிறைவுக்கு கொண்டு வர வேண்டுமே என்பதால் ‘கிளம்பினோம்’ என்ற சொல்லை பயன்படுத்த வேண்டி வந்தது. உள்ளபடி இங்கிருந்து கிளம்புவது என்ற சொல்லுக்கு .

வேலையில்லை.காரணம் இது சொந்த திணை அல்லவா?
மழைக்குள் இருக்கும் ஒரு பயணத்திற்காக விருப்பப்பட்டது 2015சென்னை வெள்ளப்பேரழிவு ஏறபடும் வரைக்கும்தான்.பிறந்ததிலிருந்து வாழ்வு இனிமையின் ஒரங்கமாக இருந்த விண் மழை இன்று வரை அச்சமூட்டுகிறது.

திருநெல்வேலி சுற்றலுக்கு கிளம்பும்போது தொடங்கிய மழை ஊருக்கு வண்டியேறும் வரைக்கும் ஊர் வந்த பின்னரும் பொழிந்து கொண்டுதானிருந்தது..பதினோரு மணி நேரம் மழைக்குள்ளும் ஈரத்துக்குள்ளும்தான் இருந்துள்ளோம்.உள்ளங்கி,வெளியங்கி எல்லாம் ஈர மயம்.கைகளிலும் கால்களிலும் வெள்ளை பூத்த ஒரு சடலக்களை.. என் வாழ்வில் இவ்வளவு நேரம் மழை ஈரத்துக்குள் இருந்ததில்லை. விரும்பியது நடப்பதற்கும் ஒரு விலை இல்லாமல் இல்லையே.காய்ச்சலும் நீர் ஒவ்வாமையும் இருமலும் உறுதி எனத் தோன்றியது. இறை வேட்டல் பலன் தராமல் போகாது.அன்றிரவு முழுமையாகக் கழிந்து வைகறை அதன் முழுமையுடன் புலர்ந்தது.உடல் முழு நலம். இணக்கத்தைக்கொண்டு மழை ஏவப்பட்டிருக்கும்போது ஏவலை மீறும் துணிவு அடியானுக்கு வராதல்லவா?.
இப்பதிவை எழுதி கொண்டிருக்கும் சமயம் தாமிரபரணியில் 94,000 கன அடி அளவிற்கு தண்ணீர் அணைகளிலிருந்து திறக்கப்பட்டுள்ளது. ஆயிரம் மத யானைகளின் அணிவகுப்பைப்போல தாமிரபரணி இரு மருங்குகளையும் தொட்டுக் கொண்டுப் புரள்கிறது. கலியாவூர் முதல் புன்னக்காயல்வரையிலான ஆற்றின் கரையோர ஊரார்களை வீடுகளிலிருந்து பாதுகாப்புக்கருதி வெளியேற்றிக் கொண்டிருக்கிறது மாவட்ட நிர்வாகம்.இழப்பையும் சேதத்தையும் அச்சத்தையும் விட்டு இறைவன் நம்மனைவரையும் காக்கட்டும்.

#மழைரிஹ்லா #வேணுவனம்

சரந்தீபில் மலையாளக் கதைகள்...நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.ஆக்கம்...
05/12/2024

சரந்தீபில் மலையாளக் கதைகள்...
நூற்றாண்டுகள் பழமையான சிறீலங்காவில் மலையாள மரபின் வரலாற்றுத் தடயங்கள் தேடி ஒரு பயணம்.
ஆக்கம்: அப்துல் மஜீத் நத்வி
{2024 நவம்பர் 24ஞாயிற்றுக் கிழமை நாளிட்ட சுப்ரபாதம் மலையாள நாளிதழ் ஞாயர் பிரபாதத்தில் வெளிவந்ததின் தமிழாக்கம்}
மொழியாக்கம்: மிடாலம் அன்சார்
--

"ஏறி கப்பல் பாயுசர்த்தி ராப்பகல்களோடி
எத்திடை ஷஹர் முகல்ல பஸ்தி தன்னில் ஓடி"
(மலப்புரம் கிஸ்ஸா, மொயின் குட்டி வைத்தியர்)

முழு நிலவு வெள்ளி வெளிச்சம் பரப்பிய அந்த இரவில் அரண்மனை மாடியில் வழக்கம் போல சேரமான் பெருமாள் உலாவிக் கொண்டிருந்தார்.அப்போது சந்திரன் இரண்டாக பிளந்து நிற்கும் காட்சி மன்னரின் பார்வையில் பட்டது.நம்பமுடியாத இந்த அற்புதத்தை நீண்ட நேரம் கண்டார். இந்நிகழ்ச்சி அவரை மிகுந்த குழப்பத்திலும் ஆழ்த்தியது.இதன் விளக்கத்தை அறிந்து கொள்ள அரண்மனை பண்டிதர்களையும் ஜோதிடர்களையும் கூட்டினார்.

தான் கண்ட அசாதாரண நிகழ்வை அவர்களிடம் விவரித்தார். அதன் காரண காரியங்களை விளக்குமாறு பணித்தார்.இயற்கைக்கு மாற்றமான இந்நிகழ்வின் விளக்கம் கூற முடியாமல் அவர்கள் தவித்தனர்.அக்கால கட்டத்தில் அறபியாவிலிருந்து ஒரு வணிகக் குழு கடல்தீரத்தில் இறங்கிய செய்தியை மன்னர் அறிந்தார்.அவர்களை அரண்மனைக்கு அழைத்தார்.
அரச மரியாதையும் விருந்தும் கொடுத்த பின்னர் மன்னர் தான் கண்ட அரிய வானியல் நிகழ்வை அவர்களிடம் விவரித்தார் முஹம்மது ( ஸல்) அவர்கள் இறைத்தூதராக வந்தது குறித்தும் அதற்கு சான்று பகரும் இறை அத்தாட்சிகளில் ஒன்றாக சந்திரனை பிளந்து காட்டிய அரிய நிகழ்வையும் அவர்கள் வர்ணித்தனர்.

தன்னுடைய சந்தேகத்தை போக்கிய அவர்களின் விளக்கம் கேட்ட மன்னர் அத்தகைய அத்தாட்சிகள் நிகழ்த்தும் தகுதியுள்ள அந்த மாமனிதரைக் காணும் ஆவல் கொண்டார்.இலங்கையின் ஆதம் மலையை தரிசித்த பின்னர் திரும்பும் போது அறபியா செல்லும் பயணத்தில் தன்னையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று அவஎகளிடம் வேண்டினார்.இவ்வாறுதான் சேரமான் பெருமாள் பாய்மரக்கப்பலில் மக்கா சென்றார்.இஸ்லாம் கடல் கடந்து கேரளத்தை அடைந்த இவ்வரலாற்றில் அறபிய பயணிகள் ஆதம் மலையை காணச் சென்ற இந்நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்தது.

சிறுவயது முதல் நாம் கேட்டு வளர்ந்த இச்சம்பவத்தில் வரும் ஆதம் மலையானது இந்திய வரைபடத்தின் சுவட்டை பிரிக்க முடியாத தொடர்போல் ஒட்டிக் கிடக்கும் இலங்கையில் உள்ளது.

இந்தியாவுடன் மிக நெருக்கமான வரலாறும் பண்பாடும் கொண்ட து இலங்கை. மக்களின் வரலாற்றிலும் பண்பாட்டு மரபிலும் வேறுபாடுகள் இருந்தாலும் தென்னிந்தியாவுடன் இலங்கை கொண்டிருக்கும் தொடர்பு ஆழ வேருன்றியதும் தொன்மையானதும் ஆகும்.

நீண்ட அரசியல் காரணங்களுக்கு பிறகு இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான இரயில்- சாலை போக்குவரத்தை சாத்தியமாக்குவது குறித்த ஆலோசனைகள் தொடர்ந்து கொண்டிருக்கினறன.இது தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையிலான கடல் இடைவெளியை இணைப்பது மட்டுமன்றி காலங் காலமாக கொடுக்கல் வாங்கலில் ஈடுபட்டு வளர்ந்து வியாபித்த இரு பிரதேச மக்களின் இருதயங்களையும் இணைக்க வல்லது. மேலும் வணிகமும் கலையும் கலாச்சாரமும் கூடிய விலைமதிப்பற்ற பண்பாட்டையும் இணைக்க வல்லது ஆகும்.

சேரமான் பெருமாளின் கேள்விக்கு விடையளித்த அறபியர்கள் மட்டுமன்றி அறபியாவிலிருந்தும் ஐரோப்பாவிலிருந்தும் கடல் கடந்து வந்த ஏராளமான பயணிகளும் யாத்திரீகர்களும் புண்ணியவான்களும் ஆவலுடன் தரிசித்த அக்கால உலக பிரசித்தி பெற்ற ஆதம் மலையைப் பற்றி சுலைமான் தாஜிர் போன்ற வணிகர்களும் இப்னு பதூதா போன்ற உலகப் பயணிகளும் நாகூர் ஷாஹுல் ஹமீது நாயகம் போன்ற சூஃபி பிரச்சாரகர்களும் இம்மலையை தரிசித்த வரலாறு பிரசித்தி பெற்றது.

இலங்கையின் மத்திய பகுதியான கண்டி மாநிலத்தில் ஆதம் மலை உள்ளது.நாட்டின் தலைநகரான கொழும்புவிலிருந்து 180 கி.மீ. தொலைவு கொண்டது ஆதம் கொடுமுடி. புராதன காலம் முதல் பயணிகளுக்கும் யாத்திரீகர்களுக்கும் மிகவும் விருப்பமான ஆதம் மலை உச்சியில் காணப்படும் கால் அடையாளம் குறித்து எல்லா மதத்தினரும் உரிமை கோரும் செவிவழி செய்திகள் பல உண்டு. முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் ஆதம்( அலை) அவர்களின் கால்த்தடம் என்று உரிமை கொள்கின்றனர். சிங்களர்கள் புத்தரின் கால்த்தடம் என்றும் இந்துக்கள் சிவனடி பாதம் என்றும் கருதுகின்றனர்.

7359 அடி (2.243 மீ) உயரத்தில் மலைமுகட்டில் பாறையில் பதித்த இந்த கால் அடையாளத்தை இவர்கள் தங்களின் புண்ணியவான்களின் கால்த்தடம் என்று உரிமை கோருகின்றனர் என்றாலும் பிரிட்டிஷ், அறபிய பதிவுகளில் Adams peak என்றே அதிகாரப்பூர்வமாக பதியப்பட்டுள்ளது

கண்டியைச் சுற்றியுள்ள எழில் கொஞ்சும் நிலப்பரப்பும் கடல் பரப்பும் கொண்ட கண்ணீர்த் துளி போன்ற தீவாக இலங்கை உள்ளது.கண்டி மாவட்டத்தின் உயர்வான மலைத்தொடரில் ஆதம் மலை உள்ளது.சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆதம் நபி பல வருடங்கள் பாவமன்னிப்புக் கோரி சுஜூதில் இருந்ததாக தபரி போன்ற தஃப்ஸீரில் உள்ளது.

மலையளவு பச்சாதாபம் கொண்டதன் காரணமாக அந்நாடு கண்ணீர்த் துளி போன்ற நில அமைப்பை பெற்றுள்ளதாக கருத இடமுண்டு.ஆதம் மலையை தரிசிக்கவும் கடல் வணிகம் செய்யவும் செல்லும் அயல் நாட்டவர்களின் முக்கிய வழித்தங்கல் பகுதியாக பண்டைய கேரளம் விளங்கியது. மலபார்- சோழமண்டலக் கடற்கரையுடன் இலங்கைக்குள்ள நெருக்கமும் தொடர்ச்சியும் வரலாற்றில் நீங்கா இடம் கொண்டது.மலையாளக் கரையின் அயல் நாட்டு வரலாற்று ஏடுகளில் இலங்கை முதலிடத்தைப் பிடித்துள்ளது.

குஞ்ஞாலி மரைக்காயரின் இறுதி ஓய்விடம்

சிலாபம் பகுதியில் முதலாம் குஞ்ஞாலி மரைக்காயரின் அடக்கஸ்தலம் உள்ளது.இலங்கையில் வடமேற்கு மாநிலத்தில் பண்டைய கடற்கரை ஊரான புத்தளத்திற்கு அருகாமையில் இது உள்ளது. போர்ச்சுக்கீசிய ஆக்கிரமிப்பிற்கு எதிராக போர் செய்ய கப்பல் படைத் தலைவராக இலங்கைக்கு சென்று அப்போரில் வீர மரணம் அடைந்த முதலாம் . குஞ்ஞாலி மரைக்காயரின் கபர் இங்கு உள்ளது.

கி.பி.1524 ல் கோழிக்கோடு சாமூதிரி மன்னரின் முக்கிய கடற்படை தளபதியான குஞஞாலி மரைக்காயர்களில் முதலாம் நபரான குட்டியாலி மரைக்காயர் கப்பல் படையுடன் இலங்கைக்கு சென்றார். போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிராக போர் செய்ய சித்தாவாக்க மன்னரான மாயதுன்னாவின் வேண்டுகோளின்படி சாமூதிரி மரைக்காயர் படையை இலங்கைக்கு அனுப்பினார்.

போர்ச்சுக்கீசியர்களுக்கு எதிரான போராட்டத்தின் ஒரு முக்கியமான கட்டத்தில் நயவஞ்சகத்துடன் செயல்பட்ட சீதாவக்க அரசர், போர்ச்சுக்கீசியர்களுடன் இணக்கமாக நடந்து கொண்டார். . இந்த சதியை அறிந்து கொண்ட குஞ்ஞாலி மரைக்காயர் விடாமல் தொடர்ந்து போரிட்டு ஐம்பதிற்கும் மேற்பட்ட பரங்கியரின் கப்பல்களைத் தாக்கி தகர்த்தார். பின்னர் கோழிக்கோடு முதல் இலங்கை வரையிலான பிரதான கடல் பாதையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததோடு இலங்கையில் கோழிக்கோட்டின் கப்பற்படை மையத்தை அமைத்தார்.

சிறிய படகுகள் மூலம் அதிவேகத்தில் பயணித்து மின்னல் வேக தாக்குதல்கள் தொடுத்த குஞ்ஞாலி மரைக்காயரின் முன் பரங்கிப்படையினர் பலதடவை நிலைகுலைந்த போதிலும் கிபி1539 ல் போர்ச்சுக்சிய படைத்தலைவன் மெகல் பெரேராவுடன் நடந்த மோதலில் முதலாம் குஞ்ஞாலி மரைக்காயர் வீர மரணமடைந்தார். புத்தளம் கடலோரத்தில் வீரமரணம் அடைந்ததாக கருதப்படும் குஞ்ஞாலி மரைக்காயரின் உடல் அருகாமையிலுள்ள சிலாபம் மலே பள்ளிவாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.குஞ்ஞாலி மரைக்காயரின் மக்பராவில் நிறுவப்பட்டுள்ள மீஸான் கல்லில் அவருடைய பெயர் தமிழில் பொறிக்கப்பட்டுள்ளது.
பன்முகத்தனமை கொண்ட இலங்கை வானொலி

இலங்கையில் இப்பொழுதும் மக்கள் விரும்பும் செய்தி ஊடகமாக வானொலி உள்ளது. 1970 கால கட்டங்களில் இலங்கை வானொலி நிகழ்ச்சிகளை கேட்டிராத மலையாளிகள் மிகக் குறைவாகும்.அந்நாட்களில் மலையாளப் பாடல்களுக்காக ஒரு மணி நேரம் ஒதுக்கினர். கொழும்பு நகரத்தின் புராதன வரலாற்று நினைவுக் களஞ்சியமாக இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபன நிலையம் (SLBC) உள்ளது. சிங்களம், தமிழ் மட்டுமன்றி ஆங்கில நிகழ்ச்சிகளுமாக உலக ஒலிபரப்பு ஊடகங்களுடன் நடைபோட்டு வருகிறது. உலகின் மற்ற அரசு ஒலிபரப்பு நிலையஙகளும் உரிமை கொண்டாட முடியாத பலவித கவரும் காட்சிகளை வானொலி நிலையமெங்கும் காண முடிந்தது..
பி.பி.சி வானொலி ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு பிறகு 1925 இல் நிறுவப்பட்ட இலங்கை வானொலி நிலையம் ஆசியாவின் முதல் நிலையமாகவும் உலகின் இரண்டாவது நிலையமாகவும் உள்ளது. 2012 ஆம் ஆண்டு வரை இங்கிருந்து மலையாள நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்பட்டன. வானொலி பிரியர்களான மலையாளிகளில் பெரும்பாலானோர் இலங்கை நிகழ்ச்சிக்காக வானொலிகளை டியூன் செய்து காத்திருந்த காலம் ஒன்றிருந்தது. எல்லைகளுக்கு அப்பால் பிற மொழிகளில் தங்களள் நாட்டின் அடையாளங்களை கொண்டுசேர்ப்பது என்ற பொறுப்பு நீண்ட காலமாக இடைவிடாது நிறைவேற்றி வந்தனர்.

அக்காலத்தில் உலகின் செய்திகளை கொண்டு சேர்க்க ஊட்கங்களோ அல்லது சமூக ஊடகங்களோ இல்லாத காலகட்டத்தில் வானொலியின் கண்டுபிடிப்பு செய்தி ஊடகத்தின் புரட்சியாக இருந்தது. ஆங்கிலேய காலனியாக இருந்த இலஙகையில் 1925 ஆம் ஆண்டு கொழும்பு வானொலி நிலையம் நிறுவப்பட்டது. இவ்வாறு இலங்கையின் செய்திகளும் விதவித நிகழ்ச்சிகளும் வானொலி பெட்டிகளின் வழியாக வெளி உலகிற்கு பரவத் தொடங்கியது.

1948 பிப்ரவரி நான்காம் நாள் இலங்கை, சிலோன் காமன்வெல்த் என்ற பெயரில் பிரிட்டனின் ஆதிக்கத்திலிருந்து விடுதலையான போது நாட்டின் வெகுஜன ஊடகம் என்ற நிலையில் "ரேடியோ சிலோன்" என்ற பெயரில் கொழும்பு வானொலியாகவும் பிரபலம் அடைந்தது.பின்னுள்ள காலஙகளில் இலங்கை வானொலி இந்த மரகத தீவின் துடிப்புகளை அறிவிக்கும் தனித்துவ அடையாளமாக மாறியது. இரண்டாம் உலகப் போர், 17 வருடங்கள் நீண்ட உள்நாட்டுப் போர், இனப்போர், இந்தியாவுடனான பிணக்கம் போன்ற கட்டங்களிளை நாடு கடந்து விட்டாலும் இலங்கையின் சக்திவய்ந்த இந்த அதிகாரப்பூர்வ ஊடகம் இந்நாட்டின் அடையாளமாக உள்ளது.
1956 முதல் எஸ்.எல்.பி.ஸி தமிழ் தேசிய வானொலி தினமும் காலை எட்டு மணி முதல் பத்து மணி வரை முஸ்லிம் சமூகத்தின் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகெங்கிலுமுள்ள தமிழ் முஸ்லிம்களுக்கு மத்தியில்,, குறிப்பாக தமிழகத்தின் கிழக்கு கடற்கரை முஸ்லிம் சமூக மக்களுக்கு மத்தியில் இலங்கை வானொலி செலுத்திய ஆதிக்கம் மேலானது.

அரபு இசை நயமுள்ள சலவாத் குரலில் இந்த நிகழ்ச்சி நிறைவு பெறுகிறது.ஜாமிஆ நளீமிய்யாவில் கௌரவ விரிவிரையாளராக பணியாற்றிய எகிப்து காரி அஷ்ஷைய்க் இப்றாஹீம் அப்துர் ரஹீம் அல்மலீஹி அவர்களின் 1978 ஆகஸ்டு 17 இல் நேரடியாக பதிவு செய்த சலவாத்தின் குரலானது இப்போதும் ஒலிபரப்பாகிறது என்று அவ்வொலியை எங்களுக்கு கேட்கச் செய்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தாஜ் அவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தார். உலக பண்பாட்டு வரிசையில் தனித்துவ இடமுள்ள இலஙகை வானொலி நிலையத்தை பார்வையிட்டது இலங்கைப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவமாகும்.

பண்பாட்டு நினைவிடங்கள்

இல்ங்கையின் மேற்கு மாகாணமான களுத்துறை மாவட்டத்தில் கடலோர சுற்றுலாத் தலமாக பேருவளை உள்ளது. அறபியாவிலிருந்து முதலாவதாக வந்த முஸ்லிம்கள் இங்கு நிரந்தரமாக குடியேறினர் என்பதும் கி.பி. 1024 இல் கெச்சிமலை பள்ளிவாசலை நிறுவினர் என்பதும் வரலாறு.கி.பி எட்டாம் நூற்றாண்டில் அறபு வணிகர்களின் வருகையைத் தொடர்ந்து அவர்கள் குடியேற்றம் இப்பகுதியில் முதன்முதலில் நடந்தேறியது என்றும் நம்பப்படுகிறது.கி.பி 920 இல் கட்டப்பட்டதாக கருதப்படும் இலங்கையின் முதல் பள்ளிவாசலான அப்ரார் ஜுமுஆ பள்ளிவாசல் இங்குதான் உள்ளது.

ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்டதாக கருதப்படும் கெச்சிமலை பள்ளிவாசல் பேருவளை துறைமுகப்பகுதியில் உள்ளது. தென்னைமரங்களால் சூழப்பட்ட பாறைமீது இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது.
இலங்கையின் மிகப்பழமையான முஸ்லிம் பண்பாட்டு மையமாக கெச்சிமலை தர்காவும் பள்ளிவாசலும் உள்ளன. ஹள்ரமி சாதாத்துமார்களின் பாரம்பரியமும் மலபார் பண்பாடும் ஒத்திசையும் புண்னியத் தலமாகவும் இப்பகுதி மாறியுள்ளது.

கடல்பரப்பில் இருந்து உயர்ந்து நிற்கும் குன்றின் மீதுள்ள வளாகத்தில் சுல்தான் அஸ்ஸெய்யித் அஷ்ரஃப் தங்ஙளின் இறுதி ஓய்விடத்துடன் கூடிய ஆன்மீகக் கேந்திரமாகவும் இருக்கிறது.பன்னிரண்டாம் நூற்றாண்டில் யமனின் ஹளரமவ்த்திலுள்ள அரச குடும்பத்திலிருந்து ஏழு உறுப்பினர்களஅடங்கிய கப்பலில் வந்தனர்.இவர்கள் சுல்தான் அஷ்ரஃப் தங்ஙளும் அவர்களின் சகோதரர்களும் ஆவர்.சுல்தான் அஸ்ஸெய்யித் அஷ்ரஃப் தங்ஙளும் அவர்களின் இறுதி அமைவிடமும் பள்ளிவாசலும் இலங்கையின் அனைத்து தரப்பினராலும் போற்றப்படுகிறது. இங்கு நடைபெறும் உரூஸ் விழாவிற்கான பொது விடுமுறையும் மக்களுக்கு தேவையான சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறது.இலங்கையின் முக்கிய பாரம்பரிய பவள வணிக கேந்திரமான சைனா ஃபோர்ட் இங்குள்ளது.
திரு நாராயண சமூகம்

இலங்கையின் கேரள பாரம்பரியத்தை சுட்டிக் காட்டும் இன்னொரு காட்சியாக இருப்பது கொழும்பு நகரில் திரு நாராயண குரு மந்திரமும்திரு நாராயண சமுதாயமும் ஆகும்.கொழும்பில் பிராட்வே லயார்ட்ஸ் ரோட்டில் திரு நாராயண சொசைட்டி செயலகம் அமைந்துள்ளது. பரபரப்பான சாலைகளின் நடுவில் முக்கோண வடிவில் குருதேவ சிலையின் ஊடாக அமைந்துள்ள பழமையான செயலகம் கவரும் விதமாக உள்ளது..

சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய மலையாளியான திரு நாராயண குரு அவர்கள் 1918 இல் முதல் இலங்கை பயணத்தின்போது "அறிவார்ந்த கூட்டமைப்பு" என்ற இயக்கத்திற்கு வடிவம் கொடுத்தார். கொழும்பில் மலையாளிகள் கல்வி பெறவும் அவர்களின் வளர்ச்சிக்கும் கல்விநிலையங்களை நிறுவவேண்டும் என்பதே குருதேவனின் அறிவுரையாக இருந்தது. கூட்டமைப்பினர் இலங்கை பாராளுமன்றத்தில் சட்டரீதியான சிறப்பு பதவியுடன் தனியாகப்பதிவு செய்தனர். திரு நாராயண சொசைட்டியின் தலைமைப் பதவியில் இருக்கும் இலங்கை தலைமை நிலைய தொடர்பாளராக இருந்த எம்.கெ. ராகுல் அவர்களின் மேலாண்மையின் கீழ் தனித்துவமான பதிவு வேலைகள் நடைபெற்றன. ராகுலின் குடும்ப வேர் திருச்சூர் மாவட்டம் இரிஞ்ஞாலக்குடாவுடன் தொடர்புடையது.

திரு நாராயண குரு இரணடு தடவை இலங்கை சென்றுள்ளார். மீண்டும் அங்கு செல்ல விரும்பியிருந்தார்.1918 இன் முதலாவது பயணத்தின்போது சுவாமிகளான அமிர்தானந்தா,போதானந்தா, சத்யவிரதன் ஆகியோரும் செறுவாரி கோவிந்தன், குமார பிரம்மச்சாரி ஆகியோரும் அடங்கிய குழுவினர் குருவுடன் இருந்தனர்.

1918 செப்டம்பர் 16 இல் ஆலுவாவிலிருந்து புறப்பட்ட குரு ஒரு வாரத்துக்குப் பிறகு கொழும்பை அடைந்தார்.மண்டபத்திலிருந்து தனுஷ்கோடி சென்று கப்பல் வழியாக இலங்கையின் தலைமன்னாரை அடைந்து பின்னர் கொழும்பு சென்றார்.கொழும்பு மருதானை நிலையத்தை குரு அடைந்தபோது பெருந்திரளான மக்கள் அவர்களை வரவேற்றனர். கொழும்பை வாழ்விடமாகக் கொண்ட மலையாளிகளும் குருவின் மேன்மையை உணர்ந்த இலங்கையரும் அடங்கிய பெருங்கூட்டம் இவர்களில் அடங்கும்.

சின்னமன் கார்டனில் விசாலமான தூய்மையான பெரிய மாளிகையில் அவர்கள் குருவை தங்க வைத்தனர்.புத்த துறவிகளும் பிராமணர்களும் பிரம்ம வித்யா சங்கத்தின் தலைவி மேடம் ஹிக்கின்ஸும் குருவை தரிசித்தனர்.சம்ஸ்கிருதத்திலும் தமிழிலும் உரை நிகழ்த்தினர். புத்த துறவிகளும் கலந்துரையாடினர். அவர்களில் சிலர் திரு நாராயாண குருவை புத்த தேவனின் மறுபிறப்பு என்று பாராட்டினர். தன்னுடைய அறிவுரைகளை முன்னெடுக்க சத்யவிரத சுவாமியை இலங்கையின் பொறுப்பாளராக குரு நியமித்தார்..

1918 அக்டோபர் 7 ஆம் நாள் குரு இந்தியா திரும்பினார். இரயில்வே நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குருவை வழியனுப்பினர். நிலையம் செல்ல கார் வசதி செய்யப்பட்டிருந்தும் மக்கள் அவரை ரிக்ஷாவில் இழுத்து சென்றனர். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சுற்றுப்பயனத்தின் நூற்றாண்டு 2028 இல் கொழும்பில் நடக்க உள்ளது.அதன் பகுதியாக இலங்கை அரசு திரு நாராயண குருவின் தபால் தலையை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. குருவின் இரண்டாம் பயணம் 1926 நிகழ்ந்ததும் 1936 இல் நிறுவப்பட்ட திரு நாராயண குரு நினைவு மலையாளி செயலகம் இலங்கையுடனான மலையாள சமூகத்தின் பழமையான உறவின் வரலாற்று நினைவகமாக தலை உயர்த்தி நிற்கிறது.இன்று மலையாள சமூகத்தை ஒருங்கிணைக்கும் மையமாக இந்நினைவிடம் மாறியுள்ளது.

பண்டாரநாயக்காவில் இம்பிச்சி தெரு

இலங்கையின் தலைநகருக்கு பறந்து செல்வதும் திரும்புவதும் பண்டாரநாயக்கா விமான நிலையமாகும். உலகத்தரம் வாய்ந்த இந்த விமான நிலையத்திற்கு நிலம் கொடுத்தவர்களில் கோழிக்கோடு சாலியம் பகுதியைச் சார்ந்த இம்பிச்சி ஹாஜியும் அடங்குவார் என்ற வரலாறை அநேகர் அறிய மாட்டார்.
இப்போதும் கொழும்பின் இருதயப் பகுதியாக இம்பிச்சி தெரு என்ற பெயரில் ஒரு தெரு உள்ளது. மலையாளியான இம்பிச்சி ஹாஜி பெயரில் பிரபல வணிக கேந்திரமாக இத்தெரு உள்ளது.கோழிக்கோட்டை அடுத்த சாலியம் என்ற பகுதியிலிருந்து கடல் கடந்து வந்த புத்தன் வீட்டில் இம்பிச்சி என்ற ஏழை மகன் கருவாடு வியாபாரத்தின் மூலம் கோடீஸ்வரனாக மாறிய வரலாற்றை இந்த தெருவும் அதில் அமைந்திருக்கும் பள்ளிவாசலும் எடுத்தியம்புகிறது.இங்கு பல நிறுவனங்களை நிறுவி வணிகப்புரட்சியை ஏற்படுத்திய வரலாற்று நாயகனாக இம்பிச்சி ஹாஜி விளங்குகிறார். கொழும்பின் புறக்கோட்டை முதல் ஆட்டுப்பெட்டி வரை நீண்டு கிடக்கும் தெருவின் அதிக கட்டிடங்களும் இம்பிச்சி ஹாஜிக்கு உரியதாக இருந்த்து.

மலையாளிகள் உட்பட ஏராளமானவர்களுக்கு தொழில்வாய்ப்புகள் கொடுத்து அடைக்கலம் கொடுத்த இம்பிச்சி ஹாஜி 1936 இல் 82 ஆம் வயதில் கொழும்பில் வைத்து மரணமடைந்தார். இலங்கையிலும் கேரளத்திலும் மட்டுமன்றி சவூதி அறபியாவிலும் ஏழைகளுக்கு சமூகக கல்விக்கும் தொழில் உற்பத்திக்கும் இம்பிச்சி ஹாஜி வழங்கிய கொடைகள் போற்றுதலுக்குரியது.

இலங்கையின் வணிகச் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்த இம்பிச்சி ஹாஜியின் மறைவை இலங்கை நாளிதழ்கள் மூன்று தினஙகள் செய்தியாக்கின. பிரிட்டன் பாராளுமன்றம் இம்பிச்சி ஹாஜிக்கு இரங்கல் செலுத்தியது. "சாந்தி நீதிமான்" என்று பொருள்படும் "ஜஸ்டிஸ் ஆப் பீஸ்" என்ற விருதை வழங்கி பிரிட்டன் அரசு இந்த மலையாளியை கவுரவித்தது.

இம்பிச்சி ஹாஜி அவர்கள் பனம் கொடுத்து வாங்கிய இடத்தில் எழுப்பப்பட்ட மஸ்ஜிதுல் லாஃபிர் வளாகத்தில் அவர் அடக்கப்பட்டார்.

மலைக்கடவை  செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம் சென்று திரும்பிய தொலைவு:370 கிலோ மீட்டர்கள்.காலம்: 17 மணி நேரம்செலவு...
03/12/2024

மலைக்கடவை
செங்கோட்டை புனலூர் குகை தொடர்வண்டித்தடம்

சென்று திரும்பிய தொலைவு:370 கிலோ மீட்டர்கள்.
காலம்: 17 மணி நேரம்
செலவு 2080/=₹
ஊர்தி: ஆட்டோ,தொடர்வண்டி,பேருந்து
ஆட்கள்:02

ஒரு பயணத்தை இப்படி எண்களாக குறுக்கவியலாததுதான். ஓர் சுவைக்காக அப்படி பதிந்தேன்.

செங்கோட்டை – புனலூர் தொடர்வண்டி பாதையில் பயணிக்க வேண்டும் என்ற நீண்ட நாள் விருப்பம் 02/11/2024 திங்களன்று நிறைவேறியது.

சென்னை – புது தெஹ்லி, தாணே -- கல்யாண் பார்சிக், கொங்கண் என நீண்ட குகை இருப்புப்பாதைகளில் பல்லாண்டுகளாக பயணித்தவன். அவற்றின் பேருருக்கும்,நீளத்திற்கும் பழமைக்கும் குதூகலிக்க வைக்கும் இயற்கை எழிலுக்கும் அருகில் செங்கோட்டை புனலூர் குகைத்தடம் வராதுதான் என்றாலும் நமது கையெட்டும் பகுதியிலிருக்கும் குகைக்கடவையை பார்க்காமலிருப்பது கணக்கில் குறைதான்.
கடந்த சனிக்கிழமையன்று இங்கு கூட்டாளிகளுடன் போவோம் எனத்தோன்றி தொடர்வண்டி நேர அட்டவணை குறித்து வினவிக் கொண்டிருக்கும்போது அதைக் கேட்டுக் கொண்டிருந்த என் இணையர் நான் வருகிறேன் என முதல் பதிவு செய்து விட்டாள். மொத்த பட்டாளமே ஒற்றையாள் இராணுவமாக இருக்கும்போது கூட்டாளிகளும் குழுவாளிகளும் தேவைப்படாது அல்லவா?

செலவைக் குறைக்க எண்ணி மதியத்திற்கு ஏதாவது கட்டமுது எடுத்துக் கொள்வோமே என்றவுடன் அவள் தன் பணியைக் குறைக்க எண்ணி கடையில் அமுதுண்ணுவோமே என்றாள். அதுவும் சரிதான். அல்லும் பகலும் சமையல்கட்டுக் கதியாளர்களுக்கு இந்த ஆறுதலாவது இல்லாவிட்டால் எப்படி?

காலை ஏழு மணிக்கு குளிக்காத நாற்றத்துடன் ஆட்டோவைக் கொண்டு வந்தான் நண்பன். பேயன் விளையில் இட்டிலி,உளுந்து வடை என பசியாறைப் பொட்டலங்கட்டிக் கொண்டோம். புனலூரில் இறங்கி அடுத்த வண்டியில் ஏறி ஊர் திரும்புவதாக திட்டம். குகைப்பாதையை காண்பது மட்டுமே கொண்ட குட்டி ஒற்றை இலக்கு பயணம்.

அள்ளிப் போட்டுக் கொண்டு திருநெல்வேலி செல்லும் பனங்காட்டு எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது.எட்டரை மணிக்கு திருநெல்வேலி சந்திப்பிற்கு வந்தடைந்தோம். செங்கோட்டைக்கான பயணியர் தொடர்வண்டி ஒன்பதே முக்காலுக்குத்தான் என்பதால் வெளியில் சென்று தேநீரருந்தி விட்டு பலகாரக்கடையில் உப்பேறியும் நான்கு கத்லி துண்டங்களும் வாங்கிக் கொண்டோம்.

வண்டியும் நேரத்திற்கு புறப்பட கொஞ்ச நேரத்திலேயே குற்றாலம் சென்னை/கொங்கு மண்டல குடும்பத்தினர் இடிதடியாய் வந்து இருக்கைகளை நிரப்பினர். தெலுகும் தமிழும் கலந்த பேச்சில் பொழுது கரைந்தது.

தென்காசி வரைக்கும் கால நிலை இதம் என சொல்லமுடியாது. குன்றிய பசுமையும் வெளிச்சமும் கரடுமாக புறம் காட்சியளித்தது.செங்கோட்டையை நெருங்க நெருங்க மேற்குத்தொடர்ச்சி மலையின் தண்மை தன் சாளரங்களைத் திறக்கத்தொடங்கியது.பூவாக இறங்கிய மழைத்துளிகள்.

செங்கோட்டை நகருக்குள் போய் சாப்பிட்டு விட்டு புனலூருக்கான பயணச்சீட்டையும் எடுத்து இரண்டாம் நடைமேடைக்கு வந்து சேர்ந்தோம். ஆல மர வேர் போல அகன்று ஊன்றிய தொடர்வண்டி நிலையத்தின் அமைவிடம்.நல்ல வடிவுப்பொருத்தம். நாங்கள் போக வேண்டிய மதுரை – குருவாயூர் தொடர்வண்டி பிற்பகல் மூன்று பத்துக்குத்தான். ஒன்றாம் நடைமேடையில் மதியம் இரண்டரை மணியளவில் மதுரைக்கு செல்ல வேண்டிய வண்டித்தொடர் நின்றுக் கொண்டிருந்தது.

மொத்த நிலையத்திலும் எங்களிருவருடன் துப்புரவுப்பணியாளர் மூவர்,மேலாளர் ஒருவர்,கொல்லம் செல்லக் காத்திருந்த ஒரு பெண் பயணி,நடைமேடைக்கூரையின் சட்டகத்தில் அலகை தேய்த்துக் கொண்டிருந்த காக்கை. இவ்வளவு பேர்கள்தான்.

சென்னை,மதுரை,குருவாயூருக்கு எனதினமும் மூன்று தொடர்வண்டிகளும் வாரத்தில் இரு நாட்கள் வேளாங்கண்ணி- எர்ணாகுளத்துக்கு கூடுதலாக ஒரு வண்டி என தொடர்வண்டி போக்குவரத்து மிகச் சுருக்கம். அதனால் பயணியர் நடமாட்டமில்லை.

நிலையத்திலுள்ள மற்றவர்கள் ஒவ்வொரு திசையில் இருந்ததினால் மொத்த நிலையத்திலுமே நாங்களிருவர் மட்டும்தான் என்ற தோற்ற மயக்கம். மங்கிய கதிரொளியும் மழைத்தூறலும் மென் காற்றும் முற் பகல் நேரத்து சொக்கலை உண்டுபண்ணின.வெளிக்கும் நமக்குமான மௌன உரையாடலின் முற்றமானது தொடர்வண்டி நிலையம்.அதுவும் எங்களுடன் சேர்ந்து சொல்லிழந்து கிடந்தது.கொஞ்ச கொஞ்சமாக ஓரிரு மலையாளப் பயணிகள் வந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்புக்கு நோகாமல் இருந்தனர்.

இரண்டரை மணிக்கு புறப்பட வேண்டிய தொடர்வண்டியின் ஓட்டுநர்கள் பொறியை இங்குமங்கும் ஓடி அணியமாக்கிக் கொண்டிருந்தார்கள். புலரியில் குழந்தையை எழுப்பி பல் துலக்கி குளிப்பாட்டி உடுத்து உண்ண வைத்து கிளப்பும் பாவனை. மொத்த நிலையத்தின் சுற்றுப்புறத்தில் அது புறப்பட்டுச்செல்லும் வரைக்கும் கேட்டுக் கொண்டிருந்த ஒலிதான் மிகப்பெரிதாக இருந்தது.ஒரு வழியாக பல தயக்கங்களுடன் அது புறப்பட்டுச் சென்றது.

நாங்கள் போக வேண்டிய வண்டி மதுரையிலிருந்து பத்து நிமிடங்கள் முன்னதாகவே வந்து சேர்ந்து உரிய நேரத்தில் கிளம்பியும் விட்டது. வண்டி கிளம்பிய அரை மணி நேரத்திற்குள் ஆரியங்காவு குகை வரும் என செங்கோட்டையில் ஆட்டோ ஓட்டுநர் தெரிவித்திருந்தார்.

ஆனால் முதல் குகை வர கிட்டத்தட்ட முக்கால் மணி நேரமாகியது.எங்களின் வண்டி முப்பதிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில்தான் புனலூர் வரைக்கும் சென்றது. தொடர்வண்டியின் பின்புறமும் பொறியைப்பூட்டியிருந்தார்கள். நாட்டிலேயே இதுதான் மிகக் குறைந்த வேகத்தில் இயக்கப்படும் தொடர்வண்டி எனக் கூறிக் கொள்கிறார்கள்.

குகைகள்,மலைகளில் செல்லும் தொடர்வண்டிகளில் இவ்வாறு இரண்டு பொறிகளைப் பூட்டுவது வழமைதான். குகைக்குள் செல்லும்போது பொறி பழுதாகி தொடர் வண்டி நின்று விடக்கூடாது. அப்படி நின்றால் பயணிகளுக்கு மூச்சுத்திணறல் ஏற்படும் சாத்தியமுண்டு போலும் அதனால்தான் அப்படி செய்கிறார்கள் என இது நாள் வரை நினைத்திருந்தேன்.

ஆனால் உண்மையோ வேறு. பாதையானது கூடுதல் வளைவுகள் கொண்டதாகவும், ஏற்ற இறக்கமாகவும் இருப்பதால் கூடுதல் வேகத்தில் சென்றால் தொடர்வண்டியை நிறுத்துவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் தொடர்வண்டியின் தொடக்கத்திலும் இறுதியிலும் இரு பொறிகளை இணைத்து, மணிக்கு முப்பது கிலோ மீட்டர் வேகத்துக்குள் தொடர்வண்டி இயக்கப்படுகிறது. பின்னால் உள்ள பொறி மேடான பகுதிகளில் செல்லும் வண்டியின் வேகத்தை கூட்டவும், தாழ்வான பகுதிகளில் செல்லும்போது வேகத்தை குறைக்கும் பணியிலும் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இருபொறிகளுடன் சேர்த்து பதிநான்கு வண்டிக்கூண்டுகளுடன் முப்பதிலிருந்து நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டப்படுகின்றன.

மொத்தம் அய்ம்பது கிலோமீட்டர் தொலைவுள்ள இத்தடத்தைக் கடக்க இரண்டு அல்லது இரண்டரை மணி நேரம் எடுக்கிறது.இந்த இருப்புப்பாதையில் ஆறுகுகைகள், அய்ம்பதுக்கும் மேற்பட்ட வளைவுகள் உள்ளன. பதின்மூன்று கண்களுடைய கழுத்துருட்டி பாலம் உட்பட சிறிய பெரிய அளவிலான இருநூறு பாலங்கள் இவ்வழித்தடத்தில் உள்ளன.

நீரோடைகளும் மலைச்சாரலும் மனத்தை ஆற்றுகின்றன.முதல் குகை வழியை கடந்தவுடன் வருகிற நிலையம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் ஆரியங்காவு நிலையம்.ஆனால் கேரள எல்லை குகையின் பாதியிலேயே தொடங்கிவிடுகிறது.தொடர்ந்து குட்டி குட்டியான மலையூர்கள்.மாஞ்சோலை,கண்டி தேயிலைத் தோட்டக் குடியிருப்புகளைப்போலவே காட்சியளிக்கின்றன.

ஆறு மணிக்கு வர வேண்டிய புனலூர் நிலையத்தை ஐந்தரை மணிக்கே வந்தடைந்து விட்டோம்.நிலையத்தில் இறங்கவும் மழைப்பொழிவு.உடனே ஆட்டோ பிடித்து கேரள சாலைப்போக்குவரத்து பேருந்து நிலையத்தில் போய் தென்காசிப்பேருந்தில் எறினோம். மழையின் பொது நிறத்தை உடுத்திருந்தது புனலூர்.இரண்டு மணி நேர ஓட்டத்தில் ஒன்றரை மணி நேரமும் மழை பெய்துக் கொண்டேயிருந்தது.

இரவு ஏழரை மணிக்கு தென்காசிக்கு வந்து சேர்ந்தோம். புதிய மாவட்டத்தின் தலைநகராதலால் பேருந்து நிலையம் பரந்து விரிந்து கிடந்தது. அங்குள்ள கடைகள் பிரபஞ்சத் தொங்கலில் மின்னும் தாரகைக் கூட்டத்தைப்போல பேருந்து நிலையத்தின் விளிம்பில் ஒட்டி வைக்கப்பட்டிருந்தன.

திருநெல்வேலிக்கு செல்லும் இடை நில்லாப்பேருந்து வருவதற்கு நேரமிருந்ததால் அடுத்து தென்பட்ட புத்தகக் கடைக்குப் போனேன்,திருநெல்வேலியில் தேடியும் கிடைக்காத இலக்கிய மாத இதழ் அங்குதான் கிடைத்தது. பெயரைச் சொன்னவுடன் இன்றுதான் வந்தது என எடுத்து நீட்டினார் கடைக்காரர். ஏராளமான பருவ இதழ்களைக் கொண்டிருந்த கடை அனைத்து மங்கலங்களுடன் காட்டை நிறைத்த ஒற்றைப்பூ போல மலர்ந்திருந்தது.அவரை மனதார வாழ்த்தினேன்.

மின்னியல் சமூக ஊடகங்கள்,திறன்பேசிகளின் வருகையோடு இறந்து கொண்டிருக்கும் அச்சிதழ் வாசிப்பினால் முன்னர் போல விரிவான பருவ இதழ்களுக்கான கடைகளை நகரங்களிலும் போக்குவரத்து நிலையங்களிலும் காண முடிவதில்லை.நாளிதழ் விற்கும் கடைகள் மட்டும் அங்கொன்றும் இங்கொன்றுமாக தென்படுகின்றன.சென்னையிலும் இதுதான் நிலை.

பேருந்து வந்தது.திருநெல்வேலிக்கு சென்று ஊருக்கான கடைசிப் பேருந்தைப்பிடித்து அமர்ந்து செலவுக்கணக்கைக் கூட்டினேன். செங்கோட்டையில் இறங்கி அங்குள்ள குற்றாலக் குளியல் கால உணவகத்தில் தின்றதும் அதற்காக ஆட்டோ பிடித்ததும்தான் ஏறக்குறைய பாதி செலவை எட்டப்பார்த்தது.புனலூர் நகரத்தை அதன் இயல்பான வண்னத்தில் முழுவதுமாக பார்க்க இன்னொரு தடவை வரும்போது இந்த தவற்றை செய்யக்கூடாது என புத்தறிவு கிட்டியது.

புனலூரில் என்னென்ன புதிய தவறுகள் காத்திருக்குமோ?காத்திருந்தால்தான் என்ன! அந்த தவற்றை செய்த பிறகு அது பழையதாகி விடும்தானே!!

Address

Chennai

Telephone

+919962841761

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rihla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share